முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.7 - பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பினர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இதனால் மருத்துவ சேவைகள் பாதிப்படையும் அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ‘டீன்’ அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ‘டீன்’ விமலா ஆகியோர் பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் 20 பேர் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்றுமுதல் தொடங்க இருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை பயிற்சி மருத்துவர்கள் திரும்ப பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர் ஜானகிராமன் கூறுகையில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

பேச்சுவார்த்தையின்போது ஊக்கத்தொகையை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுமாறும், ஊக்கத்தொகையை விரைவில் உயர்த்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து எங்களது போராட்டத்தை இன்று நடத்தாமல் தள்ளிப்போட்டுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்