முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையில் வாடும் 7 மீனவர்களை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- இலங்கை சிறையில் வாடும் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரையும் உடனடியாக மீட்டு கொண்டுவர வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
     ராமநாதபுரம் மாவட்;டம் ராமேசுவரம் மல்லிகா நகர் துரைசிங்கம் என்பவரின் படகில் கடந்த 27-ந் தேதி ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 7 பேர் மீன்பிடிக்க சென்றனர். இந்த படகில் மீனவர்கள் இந்திய கடல்எல்லைக்குட்பட்ட கச்சத்தீவு பகுதி அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது டீசல்கேனில் ஏற்பட்ட கசிவு காரணமாக படகில் இருந்த டீசல் அனைத்தும் காலியாகி விட்டது. இதனால் படகினை மீண்டும் திருப்பி கரைக்கு கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக படகில் இருந்த 7 மீனவர்களும்தத்தளித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை படகினை சுற்றிவளைத்து எல்லைதாண்டி வந்ததாக கைது செய்தது.  அந்த படகில் இருந்த சத்திய சீலன், நாகராஜன், இன்னாசி, பெனிட்டோ, முனியசாமி, ஜோசப்பால்ராஜ், சுப்பிரமணி ஆகிய 7 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படை படகுடன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதன்பின்னர் அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
      மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இலங்கை சிறையில் உள்ள 7 மீனவர்களையும் உடனடியாக மீட்டு கொண்டுவர வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க நிறுவனர் தீரன் திருமுருகன் தலைமையில் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து கண்ணீர்மல்க கோரிக்கை மனு கொடுத்தனர். இலங்கை சிறையில் உள்ள 7 மீனவர்களை உடனடியாக மீட்டு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று 7 பேரையும் மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து