புதுடெல்லி : போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற கோரியும் அரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்காக லாரிகளிலும், டிராக்டர்களிலும் படையெடுத்த விவசாயிகள், தங்களுடன் 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்களை உடன் எடுத்து சென்றுள்ளனர். இதனால் வேண்டிய உணவை தாங்களாகவே தயார்படுத்தி கொள்கின்றனர். நள்ளிரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அனுமதி கிடைத்த இடத்தில் படுத்து உறங்கி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு புராரி பகுதியில் நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனினும் சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் விவசாயிகள் திரண்டு இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழைபவர்களால் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் கொரோனா பரவலை தடுக்க கொரோனா விதிகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொள்வது மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கோவிட்-19 விதிமுறைகளை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவை அனைத்தும் நமது ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை என்றார்.