முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறனுக்கு உதவியவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை

வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, நவ.11 - ஏர்செல் நிறுவனத்தை வலுக்கட்டாயமாக மேக்சிஸ் நிறுவனத்துக்கு தாரைவார்த்து கொடுக்க வைத்த விவகாரத்தில் அந்த துறையின் உயரதிகாரிகளாக இருந்தவர்கள் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு உதவி செய்ததாக தெரிகிறது. அதனால் அந்த துறை அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. 

முன்னாள் தொலைத் தொடர்பு துறை செயலர் நிருவேந்திர மிஸ்ரா, கூடுதல் செயலாளர் சர்மா, துணை டைரக்டர் ஜெனரல் மித்தல், தயாநிதி மாறனின் உதவியாளர் சஞ்சய் மூர்த்தி ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தும் என்று தெரிகிறது. இவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பவும் சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. தொலைத் தொடர்பு துறையின் ஆவணங்களை பறிமுதல் செய்த சி.பி.ஐ. அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகளை துவக்கவுள்ளதாக தெரிகிறது. 

ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த சிவசங்கரன், 2 ஜி லைசென்ஸ் கோரி விண்ணப்பித்த போது அவருக்கு அதை வழங்க உத்தரவிட்டார் மிஸ்ரா. ஆனால் அவற்றை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார் சர்மா. அவர் ஏன் அவ்வாறு உத்தரவு பிறப்பித்தார் என்ற கேள்வி எழுகிறது. இந்த காலக்கட்டத்தில்தான் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் என்னை நிர்ப்பந்தித்தார் என்று சி.பி.ஐ.யிடம் சிவசங்கரன் வாக்குமூலம் தந்துள்ளார். 

ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கிய பிறகு ஏர்செல் நிறுவனத்துக்கு ஒருங்கிணைந்த லைசென்ஸ் தரலாம் என்று சர்மாவே மீண்டும் ஒரு குறிப்பு எழுதி வைத்துள்ளார். சர்மாவின் உத்தரவின் பேரிலேயே மித்தல் இதனை பிறப்பித்துள்ளார். ஏர்செல், மேக்சிஸ் விவகாரம் நடந்த போது சர்மா தொலைத் தொடர்பு துறையின் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். முதலில் கூடுதல் செயலாளராகவும், பின்னர் செயலாளராகவும், இதையடுத்து டிராய் அமைப்பின் தலைவராகவும் ஆனார். இப்போதும் அவர் டிராய் தலைவராகத் தான் உள்ளார். இதற்காக இவர்களுக்கும் இந்த விவகாரத்தில் நேரடி தொடர்பு இருக்கலாம் என்று சி.பி.ஐ. கருதவில்லை. ஆனாலும் இவர்களிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என்று சி.பி.ஐ. எதிர்பார்க்கிறது. தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தில் மேக்சிஸ் நிறுவனத்துக்கு காட்டப்பட்ட சலுகைகள் குறித்தும் இவர்களிடம் விசாரிக்கப்பட உள்ளது. அதே போல் மாறனின் உதவியாளர் சஞ்சய் மூர்த்தியையும் விசாரணை செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. மேலும் வயர்லெஸ் பிரிவில் இணை ஆலோசகராக இருந்த ராம்ஜிசிங்கிடமும் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்