முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றார்

வியாழக்கிழமை, 26 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.26 - இந்திய குடியரசின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி நேற்றுக்காலையில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய தலைமை நீதிபதி கபாடியா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தனர். பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், எல்.கே.அத்வானி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பதவி ஏற்பு விழாவில் ஏ.கே. அந்தோணிக்கு அடுத்துதான் சரத்பவாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. 

ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி புதிய ஜனாதிபதியாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி அவர் நேற்றுக்காலையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுக்காலையில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் வீர்பூமிக்கு சென்று ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். சக்தி தளத்திற்கு சென்று இந்திரா காந்தி சமாதியிலும் லால் பகதூர் சாஸ்திரி சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார். முகர்ஜியுடன் மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை அமைச்சர் கமல்நாத்தும் உடன் சென்றார்.  பாராளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.  இந்த மையமண்டபத்திற்கும் பிரணாப் முகர்ஜிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் அவர் கடந்த 40 ஆண்டுகளாக எம்.பி.யாக பதவி வகித்தவர். பதவி ஏற்பதற்கு முன்பு ஜனாதிபதி மாளிகையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலும் பிரணாப் முகர்ஜியும் சம்பிரதாயப்படி பாராளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா,துணைஜனாதிபதி ஹமீத் அன்சாரி, சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் வரவேற்று பாராளுமன்ற மைய மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்.  பிரணாப் முகர்ஜி சரியாக நேற்றுக்காலை 11.38 மணிக்கு பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி கபாடியா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். பதவி ஏற்பின்போது நான் இந்திய குடியரசையும் சட்டத்தையும் பாதுகாத்து காப்பாற்றுவேன். இந்திய மக்களின் நலனுக்காக உழைப்பேன் என்று மனதாகவும் கடவுள் சத்தியமாகவும் உறுதி கூறுகிறேன் என்று பிரணாப் முகர்ஜி கூறினார். அரசியல் சட்டத்தை நான் தொடர்ந்து பின்பற்றுவதோடு மதித்து பாதுகாப்பேன். மக்களின் நலன்களுக்காக என் முழு நேரத்தையும் செலவழிப்பேன் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார். ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்றுக்கொண்டவுடன் பிரதீபா பாட்டிலும் பிரணாப்பும் இருக்கைகளை மாற்றிக்கொண்டனர். அப்போது 21 குண்டுகள் முழங்கின. ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டார். அதன்பின்னர் பிரணாப் உருக்கமாக உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் அரசியல் சட்டத்தை பாதுகாப்பதோடு அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன் என்றும் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார். ஆங்கிலத்தில் பேச்சை தொடங்கிய பிரணாப் ஜெயஹிந்த் என்று முடித்தார். பிரணாப் வழக்கமாத ஷூட்ஷ் அல்லது வேஷ்டிதான் அணிந்திருப்பார். ஆனால் நேற்று பதவி ஏற்பு விழாவின்போது கறுப்பு நிற ஷெர்வானியும் வெள்ளைநிற சுரிதாரும் அணிந்திருந்தார். 

பதவி ஏற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ.கே. அந்தோணிக்கு பிறகுதான் சரத்பவாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து ப.சிதம்பரத்திற்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பா.ஜ. லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், மாநில கவர்னர்கள், முதல்வர்கள் மற்றும் முக்கிய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 76 வயதாகும் பிரணாப் முகர்ஜி, மேற்குவங்கத்தை சேர்ந்தவர். அதனால் அந்த மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு அனுமதி சீட்டு கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago