முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல கோடி ரூபாய் மோசடி: அப்ரோ அதிபர் ஏசுதாஸ் கைது

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை: அக்.13​ - குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி, பல கோடி ரூபாய் கமிஷன் வாங்கி மோசடி செய்த அப்ரோ நிறுவன அதிபர் ஏசுதாஸை பெங்களூரில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை கொளத்தூரில் அப்ரோ என்ற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் இதன் கிளை தொடங்கப்பட்டது. மகளிர் சுயஉதவி குழுவினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று அப்ரோ நிறுவனம் விளம்பரம் செய்தது. இதற்காக பொதுமக்களிடம் முன்பணமும் பெறப்பட்டது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் வழங்குவதாக அந்த நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆனால், அப்ரோ நிறுவனத்தின் விளம்பரத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. இதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதிரடியாக விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தன்னிச்சையாக வழக்கு பதிவு செய்து முறைகேடாக குறைந்த வட்டியில் கடன் தருவதாக மோசடி செய்த அப்ரோ நிறுவனத்தின் நிர்வாகிகள் சிலரை 2 மாதங்களுக்கு முன்பு அதிரடியாக கைது செய்தனர். நிறுவன உரிமையாளர் ஏசுதாஸ் மட்டும் பிடிபடாமல் இருந்தார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தமிழகம் முழுவதும் ஏசுதாசை தொடர்ந்து தேடி வந்தனர். இதை தெரிந்து கொண்ட ஏசுதாஸ், வெளி மாநிலத்துக்கு தப்பினார். இதையடுத்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தனிப்படையினர் சென்று தேடினர். இந்நிலையில், பெங்களூரில் ஏசுதாஸ் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு மாறுவேடத்தில் விரைந்த போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு ஏசுதாஸ் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பாளர் தேவி ஆகியோரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.  இருவரையும் சென்னை கொண்டு வந்தனர். அவர்களிடம் முறைப்படி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எத்தனை பேரிடம், எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டது என்பது விசாரணை நடைபெறுகிறது. 

அப்ரோ டிரஸ்ட்க்கு எதிராக 27 மகளிர் சுய உதவி குழுக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த புகாரின்படி பல மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் சுமார் 2 கோடியே 12 லட்சத்து 63 ஆயிரத்து 20 ரூபாய் வரை வசூலித்து பொதுமக்களை ஏமாற்றியது தெரிய வருகிறது. மேலும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஆகையால் ஏமாற்றப்பட்டவர்கள் மேலும் அதிகரிப்பதால் ஏமாற்றப்பட்ட பணமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிறுவனத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு  விசாரணை நடந்து வருகிறது. அப்ரோ டிரஸ்ட் நிறுவனம் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் சுமார் பல கோடி ரூபாய் வரை ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என விசாரணையில் தெரிய வருகிறது. தலைமறைவாக இருந்த அப்ரோ டிரஸ்ட் நிறுவன அதிபர் ஏசுதாசை கைது செய்த தனிப்படையினரை மாநகர கமிஷனர் எஸ்.ஜார்ஜ் பாராட்டினார். 

பொது மக்கள் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் இதுபோன்ற போலியான நிதிநிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்