முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.கே. குஜ்ரால் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 4 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச. 4 - முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மறைவுக்கு பாராளுமன்றத்தில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு பாராளுமன்ற இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. 

முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் கடந்த 30 ம் தேதி காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 92. இவரது மறைவுக்கு பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். பிரதமர் மன்மோகன்சிங் நேரில் சென்று ஐ.கே. குஜ்ரால் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மத்திய அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். நாட்டு மக்களின் அஞ்சலிக்கு பிறகு ஐ.கே. குஜ்ராலின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று பாராளுமன்றத்திலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. போபால் விஷ வாயு கசிவு சம்பவம் நடந்து 28 ஆண்டுகளாகி விட்டன. இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கும் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, சபாநாயகர் மீராகுமார் ஐ.கே. குஜ்ராலைப் பற்றி புகழ்ந்து பேசினார். 

ஐ.கே. குஜ்ரால் ஒரு சிறந்த பாராளுமன்றவாதி. மிகப் பெரும் அறிஞர் என்று புகழ்ந்துரைத்த சபாநாயகர் மீராகுமார், அந்த நண்பரை இழந்து விட்டதால் நமக்கு ஏற்பட்டிருப்பது பெரிய இழப்பு என்று குறிப்பிட்டார். அவரது மறைவுக்கு இந்த சபை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறிய சபாநாயகர், அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு இந்த சபை தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டார். ஐ.கே. குஜ்ரால் பல்வேறு பதவிகளை வகித்தவர். 1997 ல் அவர் இந்த நாட்டின் பிரதமரானார். 

சுமார் ஓராண்டு காலம் மட்டுமே அவர் அந்த பதவியில் இருந்தார். அவரது மறைவு குறித்து ராஜ்யசபையிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ராஜ்யசபை தலைவர் ஹமீத் அன்சாரி கூறுகையில், குஜ்ரால் மறைவால் இந்த நாடு ஒரு மிகப் பெரும் சுதந்திரப் போராட்ட வீரரை இழந்து விட்டது. ஒரு நல்ல நிர்வாகியை, அறிவாளியை, பாராளுமன்றவாதியை நாம் இழந்து விட்டோம் என்று வேதனையோடு குறிப்பிட்டார் ஹமீத் அன்சாரி. மறைந்த குஜ்ராலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரு சபைகளிலும் உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலத்தினார்கள். அதன் பிறகு இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. குஜ்ரால் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அனுதாபம் தெரிவித்து பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்