மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை : மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையின் பெருங்கால் பாசனத்தின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள பெருங்கால் பாசனம் மூலம் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு 13.11.2019 முதல் 31.3.2020 வரை 140 நாட்களுக்கு மணிமுத்தாறு அணையிலிருந்து 384.05 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து மற்றும் தேவைக்கேற்ப தண்ணீரை திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்திலுள்ள 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் அதில் கூறியுள்ளார்.