முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை: தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை: சென்னையில் நவீன மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மக்களின் ஒத்துழைப்பு இருந்தாலும் கொரோனா தொற்றை மேலும் கட்டுப்படுத்தலாம். தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று சென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் ரூ.136 கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  திறந்து வைத்தார். கொரோனா நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக இது உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இந்த மருத்துவமனை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு மருத்துவமனையில் 80 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் மற்றும் லேப் டெக்னீஷியன்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்று முதல் இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மேலும் சிடி ஸ்கேன், எக்ஸ் ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் உள்ளது. அதில் 300 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை அளிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகளுக்காக 20 வெண்டிலேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இது தவிர நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் 30 பேர் அமர்ந்து படிக்கும் வசதி கொண்ட நூலகம், 20 பேர் ஒரே நேரத்தில் டி.வி. பார்க்கும் வசதி, காணொலி காட்சி மூலம் யோகா பயிற்சி செய்யும் வசதி மற்றும் வைபை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, 

அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன சிறப்பு மருத்துவமனை கிண்டியில் தொடங்கப்பட்டுள்ளது. 3-ம் தளத்தில் யோகா மையம், மனநல மையம் ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக உள்ளது. ரூ 136 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர் குழு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடி சிகிச்சையளிக்க இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. சென்னையில் 17500 படுக்கை வசதிகள் உள்ளது. அதனையடுத்து  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. சென்னையில் கடுமையான ஊரடங்கு நடவடிக்கையால் கடந்த 2 நாட்களாக பாதிப்பு குறைந்துள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை கட்டுப்படுத்தலாம். அதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை.

பொதுமக்கள் மாஸ்க் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய அதே வேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும்.அரசின் நிதிநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000  வழங்கியுள்ளோம்.

மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 95 கொரோனா ஆய்வகங்கள் மூலம் தினமும் 35 ஆயிரம் பரிசோதனைகள் வரை செய்யப்படுகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து