முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை கிண்டியில் ரூ.127 கோடியில் கொரோனா சிறப்பு மருத்துவமனை: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (7.7.2020) சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக  அமைக்கப்பட்டுள்ள அதிநவீன சிறப்பு  மருத்துவ உபகரண  வசதிகளுடன் 750 படுக்கைகள் கொண்ட அரசு கொரோனா மருத்துவமனையை திறந்து வைத்து, பார்வையிட்டார். 

சென்னை, கிண்டி, கிங் நோய்த் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 136 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையானது கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அரசு கொரோனா மருத்துவமனையாக 750 படுக்கைகளுடன் அதிநவீன சிறப்பு  மருத்துவ உபகரண  வசதிகளுடன் போர்கால அடிப்படையில்  தமிழ்நாடு அரசால் இரண்டே வாரத்தில் கொரோனா மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக நான்கு தளங்களுடன்,  அதிநவீன மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ள இந்த கொரோனா மருத்துவமனை, மருத்துவ ஆக்ஸிஜனுடன் கூடிய 300 படுக்கைகள், தீவிர சிகிச்சைக்காக  60 படுக்கைகள் மற்றும் 40 எண்ணிக்கையிலான சிறப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், இம்மருத்துவமனையின் பகுதி அடித்தளத்தில் (semi basement), வரவேற்பு அறை, அதிநவீன சிகிச்சைப் பிரிவு, மருந்தகம் மற்றும் இரத்த சேமிப்பு அறை ஆகியவையும்,  தரைத்தளத்தில் CT Scan, Ultra Sonogram ECHO, X-ray, Ventilator, High Flow Nasal Cannula போன்ற அதிநவீன மருத்துவ உபகரணங்களும், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் அனைத்து மருத்துவ உட்கட்டமைப்பு வசதியுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளும், மூன்றாம் தளத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மனஅழுத்தத்தை போக்குவதற்காக யோகா பயிற்சி மேற்கொள்ள  பிரத்யேக கூடம்,  கொரோனா நோயாளிகள் காணொலிக் காட்சி மூலம் மருத்துவர்களிடம்  சிகிச்சை குறித்த விவரங்களை கேட்கும் வசதி, உறவினர்களுடன் பேச அதிநவீன WIFI வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, தொற்று பரவாமல் இருக்க எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் அமைந்துள்ள அதிநவீன உபகரணங்களுடன் இம்மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் 100 மருத்துவர்கள், 90 செவிலியர்கள் மற்றும் 100 மருத்துவம் சாரா பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.             

இங்கு கொரோனா வைரஸ் தொற்றிற்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்காக, அனுபவம் வாய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வல்லுநர் குழுவில்,  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, மற்றும் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து மருத்துவ வல்லுநர்கள் மாற்றுப்பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வல்லுநர் குழுவில் உள்ளோர் ஒவ்வொரு நோயாளியின் கொரோனா தொற்றின் தன்மைக்கேற்றவாறு கொரோனா சிகிச்சை நெறிமுறைகளின்படி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனுபவம் பெற்றவர்கள்.

சிகிச்சை நெறிமுறைகள் பின்பற்றப்படுதலை கண்காணிக்க நிர்வாகத் திறன் வாய்ந்த மூத்த மருத்துவர்களும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து மாற்றுப் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அம்மூத்த மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சை ஆரம்பம் முதல் இறுதி வரை வல்லுநர்கள் குழு சீரிய முறையில் செயல்பட வழிகாட்டியாய் செயல்படுவார்கள். 

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து