சென்னை : ஜனவரி மாதத்தில் புதிய கட்சி தொடங்கப் போவதாக ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் என் உயிரே போனாலும் தமிழக மக்களே முக்கியம் அரசியல் மாற்றம் தேவை..கட்டாயம் நிகழும் என்றும் நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவரது டுவிட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம். அதிசயம், நிகழும் என்றும் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். அரசியல் மாற்றம் தேவை. கட்டாயம் நிகழும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம். கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. 2017 டிசம்பர் 31-ல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறி இருந்தேன். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான்.
கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவற மாட்டேன். தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என களம் இறங்கி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.