முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல், வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை

சனிக்கிழமை, 5 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புயல், மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி பின்பு வலுவிழந்தாலும் அதன் தாக்கம் பலத்த மழையாக கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதனால் டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்தது. இதில் 3 லட்சம் ஏக்கரில் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. இந்த தொடர் மழை காரணமாக சம்பா பயிர்களில் கரு சிதைவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் 21 ஆயிரத்து 758 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதேபோல் கடலை, சோளம், பருத்தி பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.  பொங்கல் பண்டிகையையொட்டி பயிரிடப்பட்ட கரும்புகள் 25 ஏக்கரில் சாய்ந்து கிடக்கிறது. அதே போல் 75 ஏக்கரில் நிலக்கடலையும், 75 ஏக்கரில் சோளப்பயிர்களும் வயலில் சாய்ந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளன. 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின. திருவாரூரில் உள்ள கூடூர் காற்றாற்றில் மழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியில் ஒரு சில இடங்களில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.  நாகை அருகே ஓடம் போக்கி ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் வயல்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வயல்கள் குளம் போல் காட்சி அளிக்கிறது.  சீர்காழி பகுதியில் தொடர் மழை காரணமாக 700 ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் மூழ்கி கிடக்கும் சம்பா, தாளடி, நெற்பயிர்கள், நிலக்கடை, சோளம், கரும்புகள் பயிரிடப்பட்டுள்ள வயல்களை அந்தந்த பகுதியின் வேளாண் அலுவலர்கள் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க வடிகால் வசதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.  இதேபோல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீரை எந்திரம் மூலம் வெளியேற்றும் பணியிலும் மாவட்ட நிர்வாகத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  மயிலாடுதுறை பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் மழைநீர் நிரம்பி செல்கின்றன. ஒரு சில இடங்களில் வாய்க்கால் மற்றும் ஆறுகள் உடைப்பு எடுத்து வயல்வெளிகளை சூழ்ந்துள்ளது.  திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர், புள்ளம்பாடி ஆலம்பாடி, லால்குடி பகுதிகளில் நெற்பயிர்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது.   இந்த நிலையில் நிவர் புயல் சேதங்களை கணக்கிட மத்திய குழு தமிழகம் வந்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளது. 

இந்நிலையில் நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து