முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூரில் புதிய ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி கட்டிடம் : திருவாரூர், கோவையில் ரூ.8 கோடியில் 5 பாலங்கள்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 7 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 6 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடம், திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம், திருவாரூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 8 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 பாலங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மாவட்ட அளவில் கிராமங்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தும் அலகாகவும், ஒன்றிய அளவில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் அலுவலகமாகவும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை விளங்குகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள் போதிய இடவசதி இல்லாமல் சிறிய கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

அதனைக் கருத்தில் கொண்டு 2018–19-ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு அலுவலகங்களை ஒருங்கிணைத்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 28,716 சதுரஅடி கட்டடப் பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன் 6 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடம்,

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்,

திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஊராட்சி ஒன்றியம், மணப்பறவை ஊராட்சி, சோழசூடாமணி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியம், குவளைக்கால் ஊராட்சி, வளப்பாற்றின் குறுக்கே 1 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம், அம்மையப்பன் ஊராட்சி, வாளவாய்க்காலின் குறுக்கே 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம், எடகீழையூர் ஊராட்சி, காட்டு வாய்க்கால் குறுக்கே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியம், தீத்திபாளையம் ஊராட்சி, நொய்யலாற்றின் குறுக்கே 2 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்,

என மொத்தம் 17 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் கட்டப்பட்டுள்ள 2 கட்டடங்கள் மற்றும் 5 பாலங்களை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க. சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து