முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீரை திருடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் : ஐகோர்ட் நீதிபதி எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு பகுதியில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால் அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும் தமிழக அரசு 1962 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர் பகுத்தளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோட்டை சேர்ந்த கனகவேல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில், சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படுகிறதா? என்பதை திடீர் ஆய்வுகள் மூலம் கண்டறிவதாகவும், அவ்வாறு நீர் திருடப்பட்டால் குழாய்கள் அகற்றப்பட்டு மின் இணைப்பும்  துண்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. காளிங்கராயன் கால்வாய் நீரேற்று பாசன விவசாயிகள் சங்கம் தரப்பில், பாசன பரப்பை முறையாக ஒழுங்குபடுத்தக்கோரி பல கோரிக்கைகள் வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. 

இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆதாரமாக உள்ள தண்ணீரை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஒரு தரப்புக்கு மட்டும் கிடைப்பதாக அமைந்துவிடக்கூடாது என வலியுறுத்தினார்.

அதுமட்டுமின்றி அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைக்கும் வகையில் பாசன பரப்பை முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டார். விவசாய நிலங்களை விரிவுப்படுத்துவதன் மூலம் நாடு பயனடையும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் பதிவு செய்யப்பட்ட பாசன பரப்பில் உள்ள நிலங்களுக்கு முதலில் தண்ணீரை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பது அரசின் முடிவாக இருப்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

அதேசமயம் திருடுவதற்கு ஏதுவான வளமாக தண்ணீர் இருப்பதால், அதை சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, தண்ணீரை திருடுபவர்கள் மீது பொதுப்பணித்துறையும், நீர்வள ஆதார துறையும் எடுக்கும் நடவடிக்கைகள்   மட்டும் இல்லாமல், காவல்துறையும் வழக்குப்பதிவு செய்தால் தான் முறையான புகார்கள் வரும் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கப்படாத வகையில் அனைவருக்கும் தண்ணீர் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கையை நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு நீதிபதி ஆணையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து