முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே 18-ல் ஊட்டி மலர்காட்சி: ஆணையர் பேட்டி

திங்கட்கிழமை, 12 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, மார்ச்.13 - மே 18-ந் தேதி ஊட்டி மலர்காட்சி துவங்குகிறது என தோட்டக்கலைத்துறை ஆணையர் சந்தோஷ்பாபு கூறினார். கோடை காலத்தில் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அதன்படி இந்தாண்டு வரும் கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்படும் மலர்காட்சி, ரோஜா காட்சி, பழக் காட்சி, காய்கறி கண்காட்சி தொடர்பான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கினார். எஸ்.பி.,நிஜாமுதீன், தோட்டக்கலை இணை இயக்குநர் ஹால்தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தோட்டக்கலை ஆணையர் டாக்டர் சந்தோஷ் பாபு கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:​

உலக புகழ் பெற்ற ஊட்டி மலர்காட்சியை இந்தாண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடத்த தோராயமாக தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 5,6 தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. அத்துடன் 5-ந் தேதியன்று காய்கறி காட்சியுடன் கோடைவிழாவும் துவங்க உள்ளது. 6-ந் தேதி கூடலூரில் வாசனை திரவிய காட்சியும், 12, 13 தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா காட்சியும், 18-ந் தேதி முதல் 20-ந் தேதிவரை மூன்று நாட்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்காட்சியும், 26 மற்றும் 27 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்காட்சியும் என அனைத்தும் ஒரே மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தாண்டு கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மலர்காட்சியை காணவரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து நுழைவு கட்டணத்தை தோட்டக்கலைத்துறையே மேற்கொள்ளும். ரோஜா காட்சியில் இந்தாண்டு புதிய ரகங்கள் அதிகஅளவில் வைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அதேபோல் காய்கறி கண்காட்சியிலும் 

பக்கத்து மாவட்டத்திலிருந்து வருபவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கோடை சீசன் காலங்களான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் அரசு பூங்காக்களில் சினிமா படப்பிடம் எடுக்க அனுமதி வழங்கப்படமாட்டாது. அதேபோல் இந்தாண்டும் சினிமா படப்புகள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் துரைராசு, போக்குவரத்துக் கழக கோட்டப்பொறியாளர் சண்முக வேலாயுதம், தோட்டக்கலை துணை இயக்குநர்கள் ஜெகதீஸ்குமார், மணி, உதவி இயக்குநர்கள் ராம்சுந்தர், பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்