முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்த கயா குண்டுவெடிப்பு: துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசு

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புத்தகயா, ஜூலை. 11 - புத்தகயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு அல்லது குண்டு வைத்தவர்கள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. பீகார் மாநிலம், பாட்னா அருகில் உள்ள புத்தகயா மகாபோதி கோயிலில் கடந்த 7 ம் தேதி அதிகாலையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 5 புத்த துறவிகள் படுகாயம் அடைந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய இந்த சம்பவம் பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, குண்டு வைத்தவர்கள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. தகவல் கொடுப்போரின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இது பற்றி கூறியதாவது, 

புத்த கயாவில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ.) நிபுணர்களும், தேசிய பாதுகாப்பு படை நிபுணர்களும் மாதிரிகளை சேகரித்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் குறிப்பிட்ட தகவல் கிடைக்கும் வரை எதையும் அறுதியிட்டு சொல்ல முடியாது. இந்த இடங்களில் குண்டு வைத்தவர்கள் இரவில்தான் வைத்திருக்க வேண்டும். எனினும் இது பற்றி நாங்கள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம். இதில் 3 அல்லது 4 பேர் வரை சம்பந்தப்பட்டிருக்கலாம். இது குறித்து விரிவாக விசாரணை நடந்து வருகிறது. 

குண்டு வைத்தவர்கள் காரில் வந்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. எங்களுடைய நோக்கம் அல்லது இலக்கு என்னவென்றால் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உண்மையான சதிகாரர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே. பொத்தாம்பொதுவாக யாரையும் குற்றம் சொல்லி விட முடியாது. எனவே ஒரு முடிவுக்கு வரும் முன்பாக உண்மையான சதிகாரர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த கோயிலில் எப்படி பாதுகாப்பு மீறப்பட்டது என்பதை விசாரணை குழுக்கள் கண்டுபிடிக்கும். 

பீகார் அரசுக்கு உளவுத் துறை ஏற்கனவே இது பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தது. பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடைசியாக கூட ஜூலை 3 ம் தேதி பீகார் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தோம். இவ்வாறு கூறிய மத்திய மந்திரி ஷிண்டே, எல்லா கோணத்திலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தார். இந்த பிரச்சினை மிகவும்  சிக்கலான பிரச்சினை. யாரும் இதில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. மாவோயிஸ்டுகள் ஈடுபட்டிருக்கலாம். அல்லது வகுப்பு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்டிருக்கலாம். எதையும் மறுப்பதற்கில்லை என்றார் ஷிண்டே. அதனால்தான் மத்திய அரசு சம்பவ இடத்திற்கு என்.ஐ.ஏ. மற்றும் என்.எஸ்.ஜி. படைகளை அனுப்பி வைத்தது என்றும் விவரித்தார் ஷிண்டே. மத்திய புலனாய்வு அமைப்புகள் இந்த தாக்குதல் பற்றி முழுமையாக விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்