முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு: காங்., கட்சி தலைவர் தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      இந்தியா
kangrass 2022-09-22

Source: provided

புதுடெல்லி: அடுத்தமாதம் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணையை அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு நேற்று வெளியிட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது.

காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என்று வலியுறுத்தியதையும், மூத்த தலைவர்கள் சிலர் கட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்தும் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, மதுசூதனன் மிஸ்திரி தலைமையில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு அமைக்கப்பட்டது. இந்தகுழு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்த அறிவிப்பாணையை நேற்று வெளியிட்டது.

அதன்படி, அக்டோபர் மாதம் 17-ம் தேதி நடைபெற இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை (செப்.24) தொடங்கி இந்தமாதம் 30-ம் தேதி வரை நடைபெறும். கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குகளின் எண்ணிக்கை அக்.19-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. இதில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். ஜிதேந்திர பிரசாதா தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் சோனியா காந்தி மிக நீண்ட காலமாக இருந்து வந்தார். கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை ராகுல் காந்தி தலைவராக இருந்தார்.

தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளை சந்தித்ததால், தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா இருந்து வருகிறார். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவை என கோரிக்கை விடுத்து கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினர். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என காங்கிரஸ் மேலிடம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பை காங்கிரஸ் தேர்தல் குழு நேற்று வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் மூத்த தலைவர்கள் சசிதரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தால், ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் டெல்லி வரவேண்டியிருக்கும் என அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார். 10 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வரவேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து