முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் : சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      தமிழகம்
CM-2 2023 03 30

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நேற்று வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விதி 110-ன் கீழ் வெளியிட்டுள்ள  அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

1924-25 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த வைக்கம் போராட்டம் என்பது, இந்தியாவின் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில், ஒடுக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு இருந்த தடைகளை நீக்கக் கோரி நடந்ததுதான் வைக்கம் போராட்டம்.  

1924 -ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் நாள், கேரளத் தலைவர் டி.கே.மாதவனால் தொடங்கப்பட்டது. தந்தை பெரியார், வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு 74 நாட்கள் சிறையில் இருந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்ற வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23-ம் நாள் முடிவுக்கு வந்தது. 

1925 நவம்பர் 29-ம் நாள் பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது. இந்த வெற்றி விழாவுக்கு, தந்தை பெரியாரும், நாகம்மையாரும் அழைக்கப்பட்டார்கள்.  இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றன.  தற்போது வரை வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி வரலாற்றில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எளிய மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி, வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியாரின் நினைவைப் போற்றவும், சமூகநீதிக் கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்தவும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.  

வைக்கம் போராட்டம் தொடங்கிய மார்ச் 30-ம் நாளில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ளது. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள், 2023-ம் ஆண்டு, மார்ச் 30-ம் நாள் தொடங்கி, ஓராண்டு முழுவதும் நடத்தப்படும்.  போராட்டத்தின் வரலாற்றையும், நோக்கத்தையும்,  வெற்றியையும் பொதுமக்களும் மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்படும்.

வரும் ஏப்ரல் 1, 2023 அன்று, கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராய் விஜயனோடு நானும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறேன்.  வைக்கம் போராட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் மிக முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவரான பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம்” என்ற தமிழ் நூலின் மலையாள மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது. இந்த நூலின் தெலுங்கு, கன்னடம், ஆங்கிலப் பதிப்புகளும் விரைவில் வெளியிடப்படும்.

இந்த ஆண்டு நவம்பர் 29 அன்று, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்கக்கூடிய வகையில், வெகு சிறப்பான நிகழ்ச்சி ஒன்று தமிழ்நாடு அரசால் நடத்தப்படும். 

எல்லை கடந்து சென்று வைக்கத்தில் போராடிய பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வைக்கம் விருது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். 

கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவுப் பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் 8 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு முதன்முதலாக சிறை வைக்கப்பட்டிருந்த அருவிக்குட்டி கிராமத்தில் பெரியார் நினைவிடம் ஒன்று புதிதாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவாக சிறப்பு நினைவு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகளை நடத்திப் பரிசுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கக் கூடிய வகையில், 64 பக்க நூல் ஒன்று கொண்டு வரப்படும். அது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலமாக வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்படும்.  இந்த நூல், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்படும். இவை அனைத்தும் வரும் ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து