முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சி பொறுப்பேற்று 4-ம் ஆண்டு துவக்கம்: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      தமிழகம்
CM-1 2024-05-07

Source: provided

சென்னை : தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று நேற்று 4-ம் ஆண்டு தொடங்கியதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மே மாதம் 7-ம் தேதி தமிழக முதல்வராக  மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சரவையும் பொறுப்பு ஏற்றுக்கொண்டது. 

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று நேற்று 4-ம் ஆண்டு தொடங்கியதையொட்டி முதல்வர்  மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்கள் நல் ஆதரவையும் நம்பிக்கையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றேன்.  தற்போது இந்த ஆட்சி 3 ஆண்டுகளை முடித்து விட்டு, நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல திட்டங்களால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினந்தோறும் பயனடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே அதற்கு சாட்சி.

ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு என சொன்னார் கலைஞர். இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என நிரூபித்துக் காட்டியுள்ளேன். இது எனது அரசு அல்ல, நமது அரசு. அந்த வகையில், நாடும் மாநிலமும் பயன் பெற உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சி பயணத்தை உங்கள் வாழ்த்தோடு தொடர்வேன் என்று அதில் தெரிவித்துள்ளார். 

மேலும் அந்த வீடியோவில் மக்கள் திமுக அரசின் சாதனைகளை பாராட்டிய கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்களில் கடன், தோழி பெண்கள் தங்கும் விடுதி, ரூ. 1000 மகளிர் உதவித் தொகை, பெண்கள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணம், முதல்வரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் பாராட்டி பேசியுள்ளனர்.

மேலும் அவர் தனது டுவிட்டர் பதிவில், இது சொல்லாட்சி அல்ல,  செயலாட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன்செல்கிறேன், பெருமையோடு சொல்கிறேன்.  தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று நேற்று 4-ம் ஆண்டு தொடங்கியதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கும், தலைமைச் செயலகத்துக்கும் சென்றார். அங்கு அமைச்சர்கள், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து