முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி பயணம்: தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு

திங்கட்கிழமை, 2 மார்ச் 2026      தமிழகம்
EPS 2020 11-16

சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி சென்றார். மத்திய அமைச்சர் அமித்ஸாவை சந்தித்து பேசும் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடயே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறது.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டனர். பிரதமர் மோடி கடந்த மாதம் சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். நேற்று முன்தினம் 2-வது முறையாக தமிழகம் வந்த பிரதமர் மோடி மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம், மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஷ் கோயல், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. தமிழக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர், ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன்ஜி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையின்போது அவர்கள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாக தெரிகிறது. மேலும் பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாகவும் தெரிகிறது. அதில் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிக தொகுதிகள் இடம் பெற்றிருந்ததாகவும், அதில் பல தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க பா.ஜ.க. சார்பில் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் பா.ம.க., அ.ம.மு.க. உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக கூட்டணி கட்சி தலைவர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தெரிகிறது. இந்த கூட்டம் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது.

இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் ஓரளவு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பா.ஜ.க. 50 தொகுதிகளை கேட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க.வுக்கு 35 தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. முன்வந்துள்ளது. அதில் இருந்து டி.டி.வி. தினகரனுக்கு 5 அல்லது 6 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. மீதமுள்ள தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிடும்.

அதேபோல் பா.ம.க.வுக்கு ஏற்கனவே 17 தொகுதிகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இல்லாததால் பா.ம.க.வுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக 25 தொகுதிகள் வரை அக்கட்சிக்கு கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜி.கே.வாசனுக்கு 3 தொகுதிகளும், ஐ.ஜே.கே.வுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இவர்களில் சில கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலும், சில கட்சிகள் தாமரை சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்து உள்ளன. தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில் அ.தி.மு.க. 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது. மீதமுள்ள 64 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக காலை 9.50 மணிக்கு தனபால் எம்.பி. விமானம் மூலம் டெல்லி சென்றார். எடப்பாடி பழனிசாமி கடந்த முறை, டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அவருடன், தனபால் எம்.பி. சென்றிருந்தார். எனவே இப்போதும் அவர் சென்றுள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் பா.ஜ.க. தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்களும் பங்கேற்கிறார்கள். அப்போது கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாடு கையெழுத்தானதும் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார். அதன்பிறகு பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு கையெழுத்தாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து