முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரம் கேட்டால் அசந்து போவீர்கள்

ஒரு லிட்டர் பால் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.. ஆனால் அது தான் உண்மை. ஆனால் பால் மட்டும் பசும் பால் அல்ல.. கழுதையின் பால். அதுவும் விற்கப்படுவது இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில். அம் மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி என்ற இடத்தில் தான் இந்த வியாபாரம் சக்கை போடு போடுகிறது. கழுதைப் பாலை வாங்குவதற்காக கூட்டம் அலை மோதுகிறது. கொரோனாவுக்கு பிறகு உலகம் முழுவதும் இது போன்ற பல்வேறு மாற்றங்கள் நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றாக கழுதைப் பால் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். எனவே இதையடுத்து தற்போது கழுதைப் பாலுக்கு அங்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெறும் ஒரு ஸ்பூன் பால் ரூ.100 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1 லிட்டர் கழுதைப் பால் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இது குறித்து டாக்டர் ரோட்ஜே கூறுகையில், கழுதைப் பாலால் கொரோனா போன்ற தொற்றுகள் குணமாவதில்லை. இது மக்களின் தவறான நம்பிக்கை உடல் நலம் பாதித்தால் டாக்டரிடம் சென்று சோதித்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து காசை இவ்வாறு வீணாக வாரி இறைக்கக் கூடாது என்றார். எது எப்படியோ இதன் மூலம் கழுதைக்கும் அதன் பாலுக்கும் புது மவுசு கிடைத்துள்ளது.

நிறம் மாறும்

சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் ஹேர் டை ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயர் (fire) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஹேர் டை தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நிறம் மாறும் தன்மை கொண்டது. அடர்சிவப்பு தொடங்கி பல்வேறு நுண்ணிய நிறங்களில் இந்த ஹேர் டை கிடைக்கிறது.

ஆயுட்காலத்தை அதிகரிக்கும்

குழந்தை பெற்றவர்கள் , பெறாதவர்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்லது. சுமார் 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்ததில், குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த ஆய்வில் 1911-லிருந்து 1925 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களை பரிசோதித்ததில் குழந்தை பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும், ஆண்-பெண்கள் இடையேயான ஆயுட்கால இடைவெளி அவர்களின் 60வது வயதில், ஆண்களுக்கு 2 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

சைவ உணவு சாப்பிடும் முதலை கேரளாவில் அதிசயம்

பொதுவாக சிறிய விலங்குகள், மீன்கள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் வகையைச் சேர்ந்தவைதான் முதலைகள். ஆனால் வடக்கு கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீஅனந்தபுரம் கோவில் என்ற இடம். இங்குள்ள கோவிலில் ஸ்ரீஅனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் அருள் பாலிக்கிறார்.  அக்கோயிலில் உள்ள குளத்தில் வசிக்கும் முதலை தான் இப்போது ஹைலைட். அவர்தான் நம்ம வெஜிடேரியன் முதலை. பாபியா என அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இது சில வேளைகளில் கோயிலுக்கு உள்ளேயும் வந்து விடுவதுண்டு.  கோயிலில் சமைக்கும் உணவுதான் இந்த முதலைக்கும் வழங்கப்படுகிறது.  இது எப்போது வந்தது என்று யாருக்கும் தெரியாது. கோயில் குருக்கள் அதற்கு கோயில் யானைக்கு கொடுப்பது மாதிரி சாதாரணமாக உணவை படைக்கிறார். நமக்கு படியளக்கும் பகவான்தான் அதற்கும் படியளக்கிறார் எனக் கூறும் குருக்கள், அந்த முதலை இதுவைர யாரையும் தாக்கியதில்லை என்கிறார். சாதுவான பூனை போல கோயில் பிரகாரத்தில் வலம் வருகிறார் முதலையார். 

தொலைநோக்கியை கண்டுபிடித்தவர்

1609 ஆம் வருடம் ஹாலந்து நாட்டில் 'ஹான்ஸ் லிப்பர்ஷி' என்பவர் ஒரு மூக்கு கண்ணாடி கடை வைத்திருந்தார். அவரிடம் ஒரு சிறுவன் வேலை செய்து கொண்டு இருந்தான். ஒரு நாள் அவனுக்கு பொழுது போகவில்லை. எனவே அவன் மூக்கு கண்ணாடிக்கு பயன்படும் ஒவ்வொரு லென்சாக எடுத்து பார்த்துக் கொண்டே இருந்தான். திடீரென்று குழி ஆடியை கண்ணுக்கு அருகிலும், குவி ஆடியை  சிறிது தொலைவிலும் பிடித்து கொண்டான். தூரத்தில் உள்ள சர்ச் கோபுரத்தை அந்த இரு கண்ணாடிகள் வழியாக பார்த்தான். அவன் கோபுரத்தை லென்ஸ் வழியாக பார்த்தவுடன் ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அந்த கோபுரம் அவனுக்கு மிக அருகில் இருப்பது போல தெரிந்தது. இதை தனது முதலாளியான ஹான்ஸ் லிப்பர்ஷி வந்தவுடன் கூறினான். அவர் அதை ஒரு தகரக் குழாயில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கலிலியோ அங்கு வருகிறார். இந்த விவகாரம் விஞ்ஞானியான கலிலியோவுக்கு தெரிய வந்தது. உடனே கலிலியோ இது குறித்து தெரிந்து கொண்டு இரண்டு லென்ஸ்களை பயன்படுத்தி கருவி ஒன்றை உருவாக்கினார். பின்னர் அதை சற்று மேம்படுத்தி, கொஞ்சம் வித்தியாசமாக, லென்ஸ்கள் முன்னும் பின்னும் நகரும் மாதிரியான குழாயில் அடைத்தார். அதற்கு "டெலஸ்கோப்" எனப் பெயரிட்டார். அதன் பிறகு வானியல் சரித்திரமே தலைகீழாக மாறிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்த கதை.

காதலிக்காக பீச்சில் நிரப்புவதற்காக மணலை வாங்கியவர் யார் தெரியுமா?

யாரும் இதுவரை பார்க்காத போதிலும் உலக அழகி கிளியோபாட்ரா என்பது வழக்கமாக சொல்லப்படும் விசயம். ஆனால் அதே நேரத்தில் அவள் மிகவும் ஆற்றல் மிக்க பேரரசியாக விளங்கினாள். அவளது காதலன் மார்க் ஆண்டன் என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தனது காதலி கிளியோபாட்ராவை மகிழ்விப்பதற்காக எகிப்திலிருந்து மணலை வரவழைத்தான். எதற்கு தெரியுமா துருக்கியில் உள்ள செடிர் தீவில் உள்ள பீச்சை மணலால் நிரப்பி காதலியை மகிழ்விப்பதற்காக. தற்போதும் செடிர் தீவு கிளியோபாட்ரா தீவு என்றே அழைக்கப்படுகிறது. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள்... அதிலும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு காதல் தோன்றினால் என்னவெல்லாம் நடக்கும் பாருங்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago