முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்கள் நியமனம் ரத்து தொடர்பான வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி

புதன்கிழமை, 8 மே 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

கொல்கத்தா : மேற்குவங்கத்தில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தொடர சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பள்ளி தேர்வாணையம் மூலம் 25 ஆயிரத்து 753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், 25 ஆயிரத்து 753 பேர் நியமனம் செல்லாது என்று கடந்த மாதம் 22-ந் தேதி உத்தரவிட்டு அந்த நியமனங்களை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்காள மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. ஆசிரியர்கள் நியமனங்களை ஐகோர்ட் தன்னிச்சையாக ரத்து செய்து விட்டதாக கூறியிருந்தது. இந்த மனு,  தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல்களை பார்த்து தலைமை நீதிபதி கூறியதாவது:- அரசுப்பணி என்பது இன்று மிகவும் அரிதாகிவிட்டது. அந்த நியமனங்களிலும் முறைகேடு நடந்தால், என்ன மிஞ்சும்?. இது, திட்டமிட்ட மோசடி. இப்படி நடந்தால் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். அதற்கு என்ன பரிகாரம் செய்வீர்கள்? ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான தரவுகளை டிஜிட்டல் வடிவத்தில் பராமரிப்பது மாநில அரசின் கடமை. ஆனால் மாநில அரசு அந்த தரவுகளை பராமரிக்கவில்லை. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.

பின்னர், இருதரப்பு விவாதங்களுக்கு பிறகு, 25 ஆயிரத்து 753 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. அதே சமயத்தில், இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மாநில அமைச்சர்களை கூட விசாரிக்கலாம் என்று கூறினர். இருப்பினும், விசாரணையின்போது, சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்வது போன்ற அவசர நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று சி.பி.ஐ.யை கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து