முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வில் 0.001 சதவீதம் கூட அலட்சியம் இருக்கக்கூடாது: தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுங்கள் : மத்திய அரசு, என்.டி.ஏ.வுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : நீட் தேர்வை நடத்துவதில் 0.001 சதவீதம்கூ அலட்சியம் இருக்கக்கூடாது என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வில் தவறு நடந்திருந்தால் ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு, தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

4,750 மையங்களில்... 

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, மே 5ம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.

முறைகேடு சந்தேககம்...

முன் எப்போதும் இல்லாத அளவு இந்த முறை 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்ணை பெற்றிருந்தனர். அரியாணாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். இது முறைகேடு நடத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பியது.

விடுமுறை அமர்வு...

இதையடுத்து, நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. வழக்கை சுப்ரீம் கோர்ட் விடுமுறை கால இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்ஸானுதீன் அமானுல்லா இணைந்து விசாரித்தனர். தேர்வை ரத்து செய்வது, மறுதேர்வு மற்றும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வது குறித்த மூன்று மனுக்கள் விசாரிக்கப்பட்டன.

ஜூன் 23-ல் மறுதேர்வு...

தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நரேஷ் கவுசிக், “கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வு ஜூன் 23-ம் தேதியும், அதன் முடிவுகள் 30-ம் தேதியும் வெளியாகும்” என்று தெரிவித்தார். அப்போது, கலந்தாய்வு பணிகள் பாதிக்கப்படாத வகையில் மறுதேர்வை விரைந்து நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நடைபெறவில்லை... 

இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வினாத்தாள் கசியவில்லை. வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை இந்த ஆண்டு 24 லட்சம் மாணவர்கள் எழுதி இருக்கிறார்கள். இதில், சுமார் 1,500 மாணவர்கள் தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட் விசாரணையில் இருக்கிறது. நீதிமன்றத்துக்கு பதில் அளிக்க அரசு தயாராக இருக்கிறது. இந்த குறிப்பிட்ட விஷயத்தைக் கருத்தில் கொண்டு கல்வியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்திருக்கிறது.

கடும் நடவடிக்கை...

நீட் தேர்வில் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு சூழல் உருவாக்கப்படுகிறது. தேசிய தேர்வு முகமை 3 முக்கிய தேர்வுகளை நடத்துகிறது. நீட், ஜேஇஇ, க்யூட் ஆகிய தேர்வுகளை அது வெற்றிகரமாக நடத்தி வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் நீதி வழங்குவதில் தேசிய தேர்வு முகமை உறுதியாக இருக்கிறது என்பதை நான் அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த 1,560 மாணவர்களுக்கும் நீதிமன்றம் கூறும் முறைப்படி தேர்வு நடத்தப்படும். அதற்காக, கல்வியாளர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

முறைகேடுகளுக்கு...

இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் அமர்வு நீதிபதிகள் தெரிவிக்கையில், “நீட் நுழைவுத் தேர்வில் 0.001 சதவீதம்  அலட்சியம்கூட இருக்கக்கூடாது. அதுபோன்ற அலட்சியம் இருப்பதாக தெரியவந்தால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். தவறு ஏதும் நடந்திருந்தால் அதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மற்றம் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர். 

மோதல் அல்ல...

நீதிபதிகள் மேலும் தெரிவிக்கையில், நீட் தேர்வு எழுதும் மாணவர்களை உங்களின் கிளையன்ட் என்று நினைக்காதீர்கள், அவர்களிடம் விரோத போக்கும் வேண்டாம், இது மாணவர்கள் மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு இடையேயான மோதல் அல்ல. மேலும், தேசிய தேர்வு முகமை அலுவலர்களிடம் 0.001 சதவீதம்  அலட்சியம் இருந்தாலும் அதன் மீது கவனம் செலுத்தி அதற்கு தீர்வு காணுங்கள் என்று அறிவுறுத்தினர். பின்னர் இந்த வழக்கில் முக்கிய மனு விசாரணைக்கு வர உள்ள ஜூலை 8ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். 

வழங்கவில்லை...

முன்னதாக வழக்கு விசாரணையின் போது தேசிய தேர்வு முகமைக்கு எந்த வாய்ப்பையும் நீதிமன்றம் வழங்கவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து