முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

புதிய டிரெண்ட்

எந்த விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஒருவரது உடல்நலத்திற்கும், ஃபிட்னெஸுக்கும் ஏற்றது என்பதைக் குறித்து, டிஎன்ஏ மூலமாக கண்டறியும் நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் டிஎன்ஏ கிட் பரிசோதனை மேற்கொண்ட பின், நாம் உட்கொள்ளும் உணவு குறித்து தேர்ந்தெடுப்பதிலும், என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதிலும், எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை எளிதில் அறியலாம். டிஎன்ஏ பரிசோதனை மூலம் கிடைக்கும் நன்மைகள் குறைவாக இருக்கிறது என்றும் எனினும், இதனால் கிடைக்கும் நன்மைகள் வணிக நோக்கில் அளவுக்கதிகமாகவும் மிகைப்படுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எரிமலையில் கொடி

இந்தோனேஷியாவில் புகைந்து கொண்டிருக்கும் டுகோனு எரிமலை பகுதிக்கு தைரியமாகச் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த சாய் தேஜா என்ற இளைஞர் எரிமலையில் தேசிய கொடியை பறக்க செய்தும், அதனை வீடியோ பதிவு செய்தும் சாதனை படைத்திருக்கிறார்.  உள்ளூர் மக்களின் உதவியோடு சாதனை படைத்த அவர், இந்த பயணம் மனநிறைவை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மரபணு மாற்றப்பட்ட பன்றியில் வளர்க்கப்பட்ட சிறுநீரகத்தை ஒரு மனித நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தி, அதை முழுமையான ஆற்றலுடன் இயங்கக்கூடிய வகையில் இணைத்து சாதனை படைத்துள்ளனர். பன்றியின் உடலில் வளர்க்கப்பட்ட சிறுநீரகம் இப்போது மனித உடலில் சாதாரணமாக வேலை செய்வதைக் கண்டறிந்துள்ளனர். உறுப்புகளில் கோளாறு ஏற்பட்டு, நோய்வாய்ப்படும் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முயற்சிதான் உடல் உறுப்பு மாற்றம் செய்யும் முறை. இது இப்போது வேறொரு முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது, உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கையை காட்டிலும், உறுப்பு மாற்றம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாகப் பலரும் உயிர் இழக்கின்றனர். இதற்கான தீர்வாக மரபணு மாற்ற முறைப்படி பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட உடல் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்திப் பயன்படுத்தலாம் என்ற முயற்சி முன்வைக்கப்பட்டது. அதன்படி, மூளைச்சாவு அடைந்த ஒரு மனிதரின் குடும்பத்தின் ஒப்புதலுடன், மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை நோயாளிக்கு இணைத்து, அவரை வென்டிலேட்டரில் உயிருடன் வைத்து அசாதாரணமான சோதனையை மேற்கொண்டனர். அறுவைசிகிச்சைக்குப் பின்னர் சிறுநீரக செயல்பாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணித்தபோது அது எதிர்பார்த்ததை விட இயல்பாக செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினானா?

சார்லஸ் டார்வின் என்பவரை பற்றி தெரியாவர்கள் இருக்க முடியாது. இந்த உலகில் புழு, பூச்சி தொடங்கி மனித இனம் வரை அனைத்தும் எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கு விடை காண முயன்றவர். அவர் உருவாக்கிய தியரியே.. அதாவது கோட்பாடே பரிணாம கொள்கை. இதன் மூலம் ஒரு செல்லிலிருந்து பிரிந்த புதிய உயிரினம் படிப்படியாக பல்கி பெருகி, தாவரங்கள், பூச்சிகள், தவளைகள், மீன்கள், பறவைகள், விலங்குகள், குரங்கின் வழியாக மனித இனம் தோன்றின என்கிறார். ஆனால் இன்றைய நவீன வீஞ்ஞானம் செல்லை மட்டுமின்றி அதனுள் புதைந்திருக்கும் கோடிக்கணக்கான மரபணுக்கள், அவை உருவாக காரணமாக டிஎன்ஏ, ஆர்என்ஏக்கள் என தனது பயணத்தை மிகவும் மைக்ரோ, நேனோ லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. அதில்தான் முக்கிய திருப்பம் நடந்துள்ளது. கடந்த 2015 இல் கேம்பிரிட்ஜ் பல்கலை நடத்திய ஆய்வில் தாவரங்களில் இருந்து வந்த மரபணுக்கள் வாயிலாக மனித இனம் தோன்றியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி சுமார் 1 சதவீத மனித மரபணுக்கள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவைதான் என அடித்து சொல்கின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்.. இப்போ சொல்லுங்கள் நாம் குரங்கிலிருந்து வந்தோமா, தாவரத்திலிருந்து வந்தோமா...

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்