முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய தூய்மை மையம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையிலான ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா எனும் தேசிய தூய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

மகாத்மா காந்திக்கு அர்ப்பணம் செய்யப்படும் வகையிலான இந்த மையம் குறித்து காந்தியடிகளின் சம்பரன் சத்தியாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் போது, 10 ஏப்ரல் 2017 அன்று, பிரதமர் முதன்முதலாக அறிவித்திருந்தார். மக்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கொண்டு வரும், உலகிலேயே மிகப்பெரிய இயக்கமான தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றிகரமான பயணம் குறித்து இனி வரும் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்த மையங்கள் செயல்படும்.

இந்த மையங்களில் தூய்மை பற்றிய தகவல்கள், விழிப்புணர்வு, கல்வி, இதர தொடர்புடைய அம்சங்கள் குறித்து டிஜிட்டல் முறையிலான தகவல்களும், இதர வகையிலான தகவல்களும் இடம் பெறும். கலந்துரையாடும் வகையில், முக்கிய செய்திகளும், வெற்றிக் கட்டுரைகளும், சிறந்த நடைமுறைகளும் உலக அளவிலான தரங்களும் பற்றிய முழுமையான கற்றல் முறை மூலம் பல்வேறு செயல்பாடுகளும், முறைகளும் கொண்ட கல்வி அனுபவமாக இம்மையம் செயல்படும்.

முதலாவது கூடத்தில் 360 டிகிரி காணொலிக் காட்சி மூலம், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நடவடிக்கை மாற்ற இயக்கமான தூய்மை இந்தியா இயக்கம் குறித்து, அரங்கிற்கு வருபவர்கள் அனுபவித்து உணரலாம். இரண்டாவது கூடத்தில் எல்.இ.டி. பேனல்கள், ஹோலோகிராம் பெட்டிகள், விளையாட்டுகள் மூலமாக தூய்மை இந்தியா குறித்து காந்தி கண்ட கனவை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

இந்த மையத்திற்கு அருகே திறந்த வெளி அரங்கில் வைக்கப்பட்டுள்ள காட்சிப் படங்களில் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கி தூய்மைக்கான போராட்டம் வரையிலான, இந்தியாவின் பயணத்தில் பல நிகழ்ச்சிகள் குறித்து விளக்கப்பட்டிருக்கும். தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றிக்கான அடிப்படை அம்சங்கள் பற்றி, இந்த மையத்தின் சுவர்களில் சுவர் ஓவியங்களும், கலைச் சிற்பங்களும் அழகுற எடுத்துக் கூறும்.

இம்மையத்தை சுற்றிப் பார்த்த பிறகு பிரதமர், முப்பத்தாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக டெல்லியைச் சேர்ந்த 36 பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவார். திறந்தவெளிக் கலையரங்கில், சமூக விலகியிருத்தல் விதிமுறைகளைப் பின்பற்றி, இந்தக் கலந்துரையாடல் நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரதமர் நாட்டுக்கு உரையாற்றுவார். 

இந்தியாவில் கிராமப்புற சுகாதாரத்தில், தூய்மை இந்தியா இயக்கம் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 55 கோடிக்கும் அதிகமான மக்கள் திறந்த வெளியைக் கழிப்பறையாக உபயோகிக்கும் போக்கை விடுத்து, கழிப்பறைகளைப் பயன்படுத்தும் நிலைக்கு மாறியுள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து இதற்காக இந்தியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மற்ற நாடுகள் பின்பற்றும் அளவிற்கு இந்தியா முன்னோடியாக உள்ளது. தூய்மை இந்தியா இயக்கம் தற்போது இரண்டாவது கட்டத்தில் உள்ளது. திறந்த வெளியை கழிப்பறையாக உபயோகிக்காத இந்திய கிராமங்கள் (ஓ.டி.எப்) என்ற தற்போதைய நிலையிலிருந்து, திறந்தவெளியை கழிப்பறையாக ஒருபோதும் பயன்படுத்தாத கிராமங்கள் (ஓ.டி.எப் ப்ளஸ்) என்ற நிலைக்கு எடுத்துச் செல்வதும், திடக்கழிவு நீர் கழிவு மேலாண்மையை உறுதி செய்வதும் இதன் நோக்கமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து