முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி : மத்திய அமைச்சர் சாரங்கி உறுதி

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று மத்திய கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி உறுதி அளித்தார்.

அக்டோபர் 20-ம் தேதி தேசத்திற்கு ஒரு தொலைக்காட்சி உரையில் பிரதமர் மோடி, இந்திய விஞ்ஞானிகள் மருத்துவப் பரிசோதனைகளின் பல்வேறு கட்டங்களில் உள்ள பல தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான முடிவு ஊக்கமளிப்பதாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டிருந்தார். 

இதைத் தொடர்ந்து நாட்டில், கொரோனா தடுப்பூசி குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.  அரசியல் காரணங்களுக்காக தொற்றுநோயைப் பயன்படுத்துவதாகப் பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.  இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'இது தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு என்பதால் இந்த வாக்குறுதி சரியானதுதான் என்று தெரிவித்திருந்தார்.

தமிழகம், மத்தியப் பிரதேசம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் ஏற்கெனவே தங்கள் மாநிலங்களில் இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளன.  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'அனைத்து இந்தியர்களுக்கும் இலவசத் தடுப்பூசி பெற உரிமையுண்டு. எனவே நாட்டில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படவேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளார்.  

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி போட ரூ. 500 செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கோரிக்கைகள் விடுத்துள்ளன. பா.ஜ.க. அறிவித்தபடி, தேர்தல் நடைபெறும் பீகாரில் மட்டுமல்லாமல், நிச்சயம் அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும். இவ்வாறு மத்திய இணை அமைச்சர் சாரங்கி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து