நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குற்றால சாரல் தொடங்கும் போது பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்வது மற்றும் சுகாதார பணிகள் பராமரிப்பு தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
குற்றால சீசன்
குற்றால பகுதிகளில் சீசன் தொடங்குவதை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குற்றால பகுதிகளில் வழிகாட்டு பலகைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சோப்பு, சாம்பு, எண்ணெய் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பலகைகள் முக்கிய இடங்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும்.
பல்வேறு வசதிகள்
அருவி பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அருவி பகுதிகளில் அதிக இடங்களில் குப்பை தொட்டிகள் அமைத்து பொதுமக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போட வழிவகை செய்ய வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் 108 ஆம்புலன்ஸ் தேவையான பகுதிகளில் நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் முதலுதவி சிகிச்சைக்கு தேவையான மருந்து உள்ளிட்ட மருத்துவ குழுவினரை தயார் படுத்திட வேண்டும். அருவி பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறைகள் மேம்படுத்துவதுடன் உடை மாற்றும் இடம் மற்றும் கழிப்பிடங்களில் பராமரிப்பு பணிகள் மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். தடையை மீறி பிளாஸ்டிக் பை உபயோகித்தல் கடைகள் மீது அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றால பகுதிகளில் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களால் அதிகமான சாலை விபத்து ஏற்படுகிறது அதனை தடுப்பதற்கு காவல்துறையினர் மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் எச்சரிக்கை
அதே போல் மது அருந்தியவர்கள் குளிக்கவும் தடை செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றால சாரல் விழா 2017 க்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மெயின் அருவி பகுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதிகள், சாலை வசதிகள், அருவி பகுதிகள், அப்பகுதி கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பலர் பங்கேற்பு
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹீன்; அபுபெக்கர், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமசுப்பிரமணியன்,(பொ) உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.